Followers

my adds

Monday 30 May 2016

"To learn languages is to live a better life”.




Great persons’   word about learning languages




"A different language is a different vision of life." Federico Fellini
"The limits of my language are the limits of my world."
Ludwig Wittgenstein

"One language sets you in a corridor for life. Two languages open every door along the way." Frank Smith

"Language is the blood of the soul into which thoughts run and out of which they grow." Oliver Wendell Holmes

"Learning is a treasure that will follow its owner everywhere." Chinese Proverb

"To have another language is to possess a second soul." Charlemagne

"Learn everything you can, anytime you can, from anyone you can; there will always come a time when you will be grateful you did." Sarah Caldwell

"Those who know nothing of foreign languages know nothing of their own." Johann Wolfgang von Goethe

"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart." Nelson Mandela

"Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going" – Rita Mae Brown

"Learning is a treasure that will follow its owner everywhere." Chinese Proverb

"We agree that language learning is cool, but we challenge the assumption that it’s difficult."

Wednesday 25 May 2016

Hot Sun -the enemy of beauty (அழகின் எதிரி வெயில்!)













சுடும் நிலவும் சுடாத சூரியனும் சினிமா பாடல்களில்தான் சாத்தியம்! நிஜத்தில் நிலவு சுடுவதுமில்லை... சூரியன் சுட்டெரிக்கத் தவறுவதுமில்லை. பனிக்காலத்தில் வெயிலின் சுகத்தையும், வெயில் காலத்தில் பனியின் குளிர்ச்சியையும் நினைத்து ஆறுதல் அடைவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

அந்த வகையில் இது சம்மர் சிணுங்கல் சீசன்! அம்மையில் இருந்து அலர்ஜி வரை வெயில் உண்டாக்கும் விதம் விதமான நோய்கள் ஒரு பக்கமிருக்க, சருமம் கருத்துப் போவது, அளவுக்கு அதிக வியர்வை, வியர்க்குரு என புற அழகையும் பெரிதாகப் பதம் பார்க்காமல் போவதில்லை கோடை. வெயிலின் இந்த ‘உள்ளே  வெளியே’ ஆட்டத்தில் இருந்து அழகையும் ஆரோக்கியத்தையும் எப்படி மீட்பது? ஆலோசனைகள் சொல்கிறார்  அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

 அழகின் முதல் எதிரி யார் தெரியுமா? வெயில்!

அட என்னங்க... வெயில் பட்டாதான் உடம்புக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும்னும் சொல்றாங்க. அதே நேரம் வெயில் பட்டா அழகு போயிடும்னும் சொல்றாங்க. எதைத்தான் நம்பறது’ என்கிற கேள்வி பலருக்கும் வரலாம். சூரியனின் கதிர்களில் யுவிஏ, யுவிபி, யுவிசி என 3 உண்டு. காலை வெயிலில், அதாவது, 8 மணிக்கு முன்பான இளம் வெயிலில்தான் யுவிஏ கதிர்கள் இருக்கும். இது சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்பதால், இந்த நேரத்து வெயிலின் மூலம் வைட்டமின் டி சத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

யுவிபி கதிர்கள் சருமத்துக்குக் கெடுதலானவை. வெயில் நமது சருமத்தில் பட்டதும், மெலனோசைட்ஸ் என்கிற சுரப்பி தூண்டப்பட்டு, மெலனின் என்கிற நிறமி உற்பத்தி அதிகமாகும். அதனால்தான் நமது சருமம் கருப்பாகிறது. தொடர்ந்து நீண்ட நேரம் வெயிலில் நின்று வேலை பார்க்க வேண்டியவர்களுக்கு, இந்தக் கருமை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, ஒரு கட்டத்தில் ‘மங்கு’ எனப்படுகிற பிக்மென்ட்டேஷனாக மாறும். இந்த பாதிப்பைக் கொடுக்கக்கூடியது யுவிபி கதிர்கள்.

இக்கதிர்கள் பெரும்பாலும் பாலைவனப் பகுதியில்தான் அதிகம் என்பதால் நாம் கவலைப்படத் தேவையில்லை. மேலே சொன்னதெல்லாம் அக ஊதாக் கதிர்கள் என்றால், உச்சி வெயிலில் அகச்சிவப்புக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும். முன்பகல் 11 மணி முதல் 3 மணி வரையிலான வெயிலில் இது தீவிரமாக இருக்கும். இதன் தாக்கத்துக்கு ஆளாகிறவர்களுக்கு சீக்கிரமே முதுமைத்தோற்றம் வரும். முடி கொட்டும். சருமத்தில் சுருக்கங்கள் விழும். வெயில் என்றதும் பலருக்கும் தமது சருமத்தை நினைத்துதான் கவலையே... ஆனால், வெயில்,

கூந்தலையும் விட்டு வைப்பதில்லை தெரியுமா?

வகிடு எடுத்து தலை வாரும் வழக்கமுள்ளவரா நீங்கள்? உச்சி வெயிலில் செல்லும் போது, வெயில் உங்கள் வகிட்டின் வழியே உள்ளே சென்று, உடனடியாக உடம்பிலுள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்யும். கூந்தலின் வேர்க்கால்களுக்குப் போகும் ரத்த ஓட்டத்தையும் ஊட்டத்தையும் குறைக்கும். விளைவாக முடி உடைந்து, உதிரும். மண்டைப்பகுதியில் உள்ள துவாரங்கள் திறந்து, வியர்வையும் அழுக்கும் அதில் சேர்ந்து, வேர்க்கால்கள் அடைபடும். அது அப்படியே பொடுகுப் பிரச்னையை உண்டாக்கும்.

உடலில் உள்ள தண்ணீர் சத்து வெளியேறி விடுவதால், கூந்தல் வறண்டு, நுனிகள் வெடிக்கத் தொடங்கும். சிலருக்கு மண்டையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக வழுக்கை மாதிரி விழும்.அளவுக்கு அதிக வெயில் பட்டால், தலை முடியில் உள்ள தாமிரச்சத்து குறைந்து, கருப்பான கூந்தல் செம்பட்டையாக மாறும். வெயிலில் வெளியே செல்வதானால், குடை, தொப்பி என ஏதேனும் ஒரு பாதுகாப்பு அவசியம்.

இரவில் தலைக்கு விளக்கெண்ணெய் தடவி, ஈரப்பதத்தையும் எண்ணெய் பசையையும் இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அழுக்கும் வியர்வையும் சேர்ந்து முடி பிசுபிசுப்படையாமலிருக்க, அடிக்கடி தலையை அலசி சுத்தமாக்க வேண்டும்.

சன் ஸ்கிரீனா? சன் பிளாக்கா?

சன் ஸ்கிரீன் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். வெயிலின் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதே அதன் வேலை. அதே வேலையைச் செய்வதுதான் சன் பிளாக்கும்.

அப்படியானால் இரண்டும் ஒன்றா? எது பெஸ்ட்?

சன் ஸ்கிரீன் என்பது எல்லா சருமங்களுக்கும் ஒத்துப் போகும் என்று சொல்ல முடியாது. பிசுபிசுப்பாக இருப்பதால், பலரும் அதை விரும்புவதில்லை. சன் பிளாக்கில் தண்ணீரே பிரதானம். எல்லா வகை சருமங்களுக்கும் பொருந்தும். சன் ஸ்கிரீன் என்பதை ஒரு பிளெயின் கண்ணாடியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்தப் பக்கத்திலிருந்து வெளிச்சம் அந்தப் பக்கத்துக்கு ஊடுருவும். சன் பிளாக் என்பது ஒரு பக்கம் கருப்பு பெயின்ட் பூசப்பட்ட கண்ணாடி போன்றது. வெளிச்சமோ, வெயிலோ ஊடுருவாது!

எப்படித் தேர்ந்தெடுத்து உபயோகிப்பது?

SPF எனப் போட்டிருக்கும். அதன் அர்த்தம் sun protection factor. இது 15, 30, 45, 60 எனக் கிடைக்கும். 1 மணி நேரம் வெயிலில் இருக்க வேண்டுமானால் எஸ்.பி.எஃப். 15 போதும். இன்னும் அதிக நேரம் இருக்க வேண்டும் என்றால், அந்த 1 மணி நேரத்துக்குப் பிறகு மறுபடி அதே சன் ஸ்கிரீனை தடவ வேண்டும். இதற்கு பதில் எஸ்.பி.எஃப். அதிகமுள்ள சன் ஸ்கிரீன் அல்லது சன் பிளாக்கை தேர்ந்தெடுக்கலாம். ‘நான் காமிடன்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், அது சருமத் துவாரங்களை அடைக்காது.

சன் ஸ்கிரீனோ, சன் பிளாக்கோ  எதுவானாலும் வெளியே கிளம்புவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே தடவப்பட வேண்டும். அப்போதுதான் அது சருமத்தின் ஆழம் வரை போய், பாதுகாப்பு தரும். வெயில் காலத்தில் ஒட்டுமொத்த சூழலுமே சூடாகத்தான் இருக்கும். வெளியே போனால்தான் என்றில்லை, வீட்டுக்குள்ளே இருப்போர், காரில் பயணம் செய்வோர் கூட, கண்டிப்பாக சன் ஸ்கிரீன் அல்லது சன் பிளாக் உபயோகிக்க வேண்டியது அவசியம்.

பார்லரில் என்னவெல்லாம் செய்து கொள்ளலாம்?

வெயிலில் அலைந்ததால் கருத்துப் போன சருமத்துக்கு ‘ஆன்ட்டி  டேன்’ ஃபேஷியல். சூடு உடம்புக்கு ‘டெர்மா சில்’ ஃபேஷியல் அல்லது கிர்ணி, ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி உள்ளிட்ட பழங்களைக் கொண்டு செய்யப்படுகிற பழ ஃபேஷியல்.

உடலின் ஒட்டுமொத்த சூட்டையும் வெளியேற்றி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, கூந்தலுக்கு ஹாட் ஆயில் மசாஜ். உடலைக் குளுமையாக்கவும், ரத்த ஓட்டத்தை தூண்டச் செய்யவும் பாதங்களுக்கு ‘சில் பெடிக்யூர்’.

கால்களின் எரிச்சலையும் வறட்சியையும் போக்கி, உடலுக்குக் குளுமையேற்ற, பால் மற்றும் அரோமா ஆயில் கொண்டு செய்யப்படுகிற பெடிக்யூர்.

கிளியோபாட்ரா குளியல் தெரியுமா?

நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்சை வேர் மூன்றையும் சிறிது தண்ணீரில் போட்டு, முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் அந்தத் தண்ணீரை குளிக்க வைத்திருக்கிற தண்ணீருடன் கலந்து, குளித்தால், குளிர்ச்சியாகவும் இருக்கும். சென்ட் உபயோகிக்காமலே உங்கள் உடல் மணக்கும். கழுதைப் பாலில் குளித்த கிளியோபாட்ரா பின்பற்றிய அழகுக் குறிப்பு இது!

Lungs Weakness of Children ( குழந்தைகளின் நுரையீரல்---பலவீனம்)


பலவீனம் ஆகிறது சென்னை குழந்தைகளின் நுரையீரல்!
சூழல் மாசு அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்




2013ம் ஆண்டு சமூக மருத்துவத் துறையின் மேற்படிப்புக்காக ஒரு மாணவர், ‘காற்று மாசுக்கேடு அதிகமுள்ள  பகுதிகளில்  மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற வகையில் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அதன் பின் இதை  விரிவாக செய்தால் பலருக்கும் பயனுடையதாக இருக்குமே என எங்களது சமூக மருத்துவத்துறையும், சென்னை ஐஐடி  கல்வி நிறுவனமும் இணைந்து ஆய்வை விரிவுபடுத்தினோம். முக்கியமாக சென்னையில்  காற்று மாசுக் கேடு  அதிகமுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த ஆய்வை செய்தோம்.

தி.நகர் போன்ற போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் வாகனங்களின் புகையால் காற்றானது பெருமளவு மாசுக்கேடு  அடைந்துள்ளது. இப்படி மாசுக்கேடு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் குழந்தைகளின் நுரையீரல் பெருமளவு  பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 204 சிறுவர்களை பரிசோதனை செய்தோம். தி.நகர் பள்ளியில் பாதி சிறுவர்களுக்கு நுரையீரல் தேவைக்கு குறைவாக வேலை செய்யும் அளவிலேயே இருந்தது. சிலருக்கு நுரையீரலில் நோய்த்தொற்றும்  இருந்தது. சரியாக சிகிச்சையளிக்காமல் விட்டால் சரியாக சுவாசிக்க முடியாமல் போவது, நுரையீரல் சுருங்குதல் போன்றவை நிகழும்.

எதிர்ப்பு சக்தியின் அளவு கூட சிலருக்கு குறைகிறது. இதனால் காற்றின் வழியாக வரும் தேவையற்ற மாசுக்கள்  நுரையீரலில் சென்று பாதிக்கிறது. ஐஐடி வளாகத்துள் இருக்கும் பள்ளியின் சிறுவர்களுக்கு இவ்வித பாதிப்புகள் அதிகம்  இல்லை. வாகனப் போக்குவரத்து அதிகம் கிடையாது. புகை மண்டலம் இல்லை. இயற்கையான மரங்கள், செடி கொடிகள் என பசுமையாக சூழலை பராமரிப்பதால் நுரையீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

சென்னையில் வாகனங்களின் பெருக்கம்தான் அதிக அளவில் மாசுக்கேடுகளை உருவாக்குகின்றன. இது சுவாசப்  பிரச்னைகளை மட்டும் உருவாக்குகிறது என பலர் நினைத்துக்கொள்வார்கள். உண்மையில் உச்சி முதல் உள்ளங்கால்  வரை பல பிரச்னைகளை சுற்றுப்புற மாசுக்கேடுகள் ஏற்படுத்துகின்றன. முடி கொட்டுதல், இளம் வயதில் முடி நரைத்தல்இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்படைதல், இளம் வயதிலேயே வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்துவது போன்ற  பிரச்னைகள் ஏற்படுவதற்கு சுற்றுச்சூழல் மாசுக்கேடு முக்கிய காரணம்.

முதியவர்களுக்கு இதனால் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்னை உருவாகக் கூட  சுகாதாரமில்லாத சுற்றுச்சூழல் காரணமாக அமைகிறது என்பதால், இந்த விஷயத்தில் தம்பதிகள் கவனமாக இருக்க  வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. நுரையீரலையும் சரியான  முறையில் செயல்பட விடாது.

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. காற்றடிக்கும் போது 3  முதல் 4 அடி வரை தூசி பறக்கிறது. இதனாலும்  மாசுக்கேடு பாதிப்புகள் சென்னையில் அதிகமாக உள்ளன. புதிய  சாலைகள் போடுவதன் மூலமும் சாலையை சுத்தமாக குப்பைகளின்றி பராமரிப்பதாலும் மட்டுமே, இத்தகைய தூசிப்  படலம் எழுவதை தடுக்க முடியும்.சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க  உணவுகளை கொடுத்தால் உடலில் நல்ல எதிர்ப்புசக்தி உருவாகி நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். பள்ளிகளின் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பள்ளிகளின் போர்டு, தரையில் உள்ள தூசிகளை துணியை வைத்து தட்டக்கூடாது.

தூசிகள் அங்கு உள்ள சிறுவர்களுக்கு பரவும். வகுப்பறைகளை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்தினால் தூசிகள்  பரவாது. சுவாசப் பயிற்சிகளை (Breathing exercises) சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  செய்து வந்தால் நுரையீரல் சுருங்குவது, தேவைக்குக் குறைவாக வேலை செய்தல் ஆகிய பிரச்னைகள் வராமல்  காக்கலாம். சத்தான காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து மிகுந்த பருப்புகள் ஆகியவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள்  அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, உடல் ஆரோக்கியமாகும்.

பொதுமக்கள் கண்ட இடத்தில் குப்பைகளை போடுவதையும், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் குப்பைகளை  எரிப்பதையும் தவிர்க்க வேண்டும். வாகன நெரிசலுக்கும், காற்று மாசுக்கேடு அடைவதற்கும்  இருசக்கர வாகனங்கள்  வைத்திருக்கும் ஒவ்வொருவரும் காரணம் என்பதை உணர வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு வாகனத்தை  பயன்படுத்தாமல் ஓரிரு வாகனத்தை பகிர்ந்து கொண்டாலே வாகன நெரிசல் பெருமளவு குறையும்.

இரு சக்கர வாகனத்தை முறையாக பராமரித்து அடிக்கடி இஞ்சின் ஆயிலை  மாற்றினால், வாகனத்தில் இருந்து  புகை  வராது. சரியாக பராமரிக்கப்படாத, தரமான எரிபொருள் நிரப்பப்படாத வாகனங்கள்தான் புகை மண்டலத்தை உருவாக்கி  காற்றை மாசடையச் செய்கின்றன. வீட்டுக்கு அருகில் உள்ள இடங்கள் என்றால் முடிந்த வரை நடந்தே செல்லுங்கள்.  தேவையற்ற எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும். காற்றையும் கொஞ்சம் சுத்தப்படுத்தும்...’’இந்த  ஆய்வை  ஐஐடி  கல்வி நிறுவனம் சார்பில் நடத்திய சூழலியல் மற்றும் நீர்வளத்துறை பொறியியல் துறையின் இணை பேராசிரியர் சிவ  நாகேந்திராவிடம் பேசினோம்...

நகரங்களில் பொதுவாக வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை 70 சதவிகிதம். தொழிற்சாலைகளின் மூலம்  வெளிப்படும் புகை மற்றும் மாசுக்கள் 20 முதல் 30 சதவிகிதம்.  வீடுகளிலிருந்து வெளிவரும் புகை 10 சதவிகிதம்.  இவ்வாறு  காற்றை மாசுக்கேடு அடைய செய்யும் காரணிகளை மூன்றுவகையாக பிரிக்கலாம். சென்னையின் சில  பகுதிகளில் மட்டுமே இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறோம். மணலி, பெருங்குடி ஆகிய பகுதிகளிலும் சுற்றுப்புற  மாசுக்கேடு எப்படி உள்ளது என அளவிட இருக்கிறோம்.

தி.நகர் பகுதியில் வாகன நெரிசல், கடைகள் அதிகரிப்பு, மக்கள்தொகை நெருக்கம் ஆகிய காரணங்களால் மாசுக்கேடின்  அளவு சற்று அதிகமாக உள்ளது. பழைய வாகனங்களுக்கு கொஞ்சம் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதிக அளவு  புகை உமிழ்பவை பழைய வாகனங்கள்தான். லாரிகளில் அளவுக்கு அதிகமான எடையை ஏற்றி ஓட்டினாலும் வெளிப்படும்  புகையின் அளவு அதிகமாக இருக்கும். ஒரு டன் ஏற்றிச் செல்லும் லாரியில் இரு டன் எடையை ஏற்றினால் வண்டி  திணறி அளவுக்கு அதிகமான எரிபொருளை குடிக்க ஆரம்பிக்கும். புகையையும் அதிகமாக உமிழ ஆரம்பிக்கும்.

வீடுகளை கட்டும் போது சூழலியல் மாசுக்கேடை ஏற்படுத்தாதவாறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும்.  இயற்கையான மரங்கள், செடி, கொடிகளை வீடுகளில், அலுவலகங்களில் போதிய அளவு வளர்த்தாலே  காற்று சுத்தமாகும். சூழலியலின் தன்மையும் மாறும்...’’ சென்னை  போன்ற நகரங்களில் ஏற்படும் சூழலியல்  மாசுக்கேடுகளில் இருந்தும், நுரையீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை சொல்கிறார் நுரையீரல்  நோய்கள் நிபுணர் டாக்டர் வினோத்குமார்...

இரு வழிகளில் நமக்கு பாதுகாப்பு தேவை. ஒன்று நம்மை நாமே மாசுக்கேடுகளில் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்.  இரண்டாவது அரசு நம்மை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் 10  ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஓட்ட உரிமம் தருவதில்லை. ஏனெனில் பழைய கார், பேருந்து  போன்றவைதான் அதிக கரும் புகையை வெளியிட்டு சூழலை மாசுபடுத்தும். நம் நாட்டிலோ 10 வருடம் தாண்டியசரியாக பராமரிக்கப்படாத வண்டிகளே பெருமளவில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதை அரசு கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு கட்டுப்படுத்தினால் வாகன மாசுக்கேடு பெருமளவில் குறையும். புதிதாக  கட்டிடங்கள் கட்டும் போது அந்தப் பகுதியை சுற்றிலும் ஏற்படும் மாசுக்கேடானது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.  இதில் சில விதிகள் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் இயற்கையான இடங்களில்மைதானங்களில் விளையாட விட வேண்டும். இதனால் நுரையீரலுக்கு கிடைக்கும் நல்ல ஆக்ஸிஜனின் அளவு  அவர்களுக்கு  அதிகரிக்கும்.

எதிர்ப்பு சக்தியும் மேம்படும். காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி, யோகா, சிறு ஓட்டம் என பழக்கப்படுத்திக் கொண்டால்  நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும். வாகனப் புகையும், மாசுக்களும் அதிகமுள்ள பகுதிகளில் செல்லும் போது N95  என்னும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம். சிக்னலில் வாகனங்கள் அதிக நேரம் நிற்கும் போது  மாசுக்கேடால்  அதிகம் பாதிக்கப்படுகிறோம். அதனால் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும் உள்ளே மாஸ்க் அணிந்து கொள்வது  தேவையற்ற மாசுக்களை தடை செய்து உங்கள் நலனை அதிகரிக்கும்.’’

மலட்டுத்தன்மை -Infertility







குழந்தையின்மை

குழந்தையின்மைக்கான காரணங்களைப் பற்றி திருமணத்துக்குப் பிறகு கவலைப்படுவதற்கு பதில், குழந்தை பிறந்தது  முதலே விழிப்பாக இருந்தால் அடுத்த தலைமுறையை அந்தப் பிரச்னையிலிருந்து மீட்கலாம்...’’ என்கிறார்  மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் செல்வி. அவர் சொல்கிற தகவல்கள்அம்மா-அப்பா ஆகப் போகிறவர்களுக்கானவை அல்ல. அம்மா-அப்பா ஆனவர்களுக்கானவை.

திருமணமான தம்பதியர், வாரம் இரு முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள வேண்டும். 30 வயதுக்கு  உள்ளானவர்கள் 1 வருடம் வரை குழந்தைக்காக காத்திருக்கலாம். 35 வயதுக்கு மேலானவர்கள் 6 மாதங்கள் வரை  காத்திருக்கலாம். அதன்பிறகும் கருத்தரிக்காவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்பது பொதுவான அறிவுரை.  ஆனால், இதெல்லாம் சூழலும் உணவுப் பழக்கங்களும் வாழ்வியலும் முறையாக இருந்த போன தலைமுறை காலக்கட்டத்துக்கானவை. முறையற்றுப் போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் அந்த ஆலோசனை எந்த அளவுக்கு உசிதமானது என்பதுதான் கேள்வியே...

தன் மகனுக்கோ, மகளுக்கோ பிற்காலத்தில் வாரிசு இல்லாமல் போய் விடக்கூடாதே எனக் கவலைப்படுகிற தாய், தன் குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அதற்கான பாதுகாப்பு  நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இதென்ன பைத்தியக்காரத்தனமான தகவலாக இருக் கிறதே என நினைக்கிறீர்களா? குழந்தையின்மைப் பிரச்னைக்கான விதைகள், குழந்தைப் பருவத்திலிருந்தே நடப்பட்டு, வளர்க்கப்பட்டு, விருட்சமாகின்றன என்பதை உணர்வீர்களா?நாகரிக வாழ்க்கை போதைகளுக்குப் பழகியவர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் விந்தையாகத்தான் இருக்கும். சந்ததியைப் பெருக்கவும் பாதுகாக்கவும் நினைக்கிற ஒவ்வொருவரும் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்  என்பதற்காகவே இந்தத் தகவல்கள்...

சில தலைமுறைகளுக்கு முன்னால் 10, 12  குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தது  நம் மனித இனம்.  இன்று இயற்கையாக நிகழக்கூடிய கருத்தரிப்பு என்ற விஷயத்துக்காக லட்சங்களை வாரி  இறைப்பதும் வாழ்க்கையை தொலைத்துவிட்டுத் தவிப்பதும் ஏன்? இதைத் தெரிந்து கொள்ள கடந்த 50 ஆண்டுகளில்  மனித வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

முதலும் முக்கியமுமான விஷயம்... மனிதர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மறந்து, மறுத்து செயற்கையான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.  பூச்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றுக்கு இந்தப்  பிரச்னை வரவில்லையே... ஏனென்றால் அவை இயற்கையோடு வாழ்கின்றன. மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சி, அறிவு  வளர்ச்சியின் காரணமாக தம் வசதிக்காகவும் வாழ்க்கையை எளிமையாக்கவும் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மின்னணுச்  சாதனங்கள், வாகனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் போன்றவை அவர்களுக்கு நன்மை செய்வதைவிட  தீமைகளையே அதிகம் செய்வதாகத் தோன்றுகிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் உண்கிற  எல்லாமே ரசாயனக் கலவை என்பதை அறிவோமா?

காலை எழுந்ததும் உபயோகிக்கிற டூத் பேஸ்ட், சோப், பாடி லோஷன், ஷாம்பு, முடி அதிகரிக்கச் செய்வதாக வருகிற  எண்ணெய்கள், சீரம், முக அழகுச் சாதனங்கள், ஐ லைனர், மஸ்காரா, சென்ட்... இன்னும் நமக்குத் தெரியாத பியூட்டி  பார்லர் பொருட்கள் என அனைத்திலும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும், ஹார்மோன் சுழற்சியை பாதிக்கும் ரசாயனங்கள்  இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வீட்டில் தரையை சுத்தப்படுத்தும் திரவம் முதல் கழிவறையை சுத்தம் செய்கிற  டாய்லெட் கிளீனர் வரை எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

பற்களுக்கு மூலிகை பல்பொடியும், தலைக்கு சீயக்காயும், உடம்புக்கு நலங்கு மாவும் ஆரோக்கியத்தைக் கொடுத்தன  என்பதை மறந்து விடாதீர்கள். சருமத்தில் படக்கூடிய எந்த ரசாயனப் பொருளும் உடனடியாக  கிரகிக்கப்பட்டு ரத்தத்தில்  கலக்கிறது. இந்த நச்சுகள் செயற்கை ஹார்மோன்களாக செயல்படத் தொடங்குகின்றன. பிளாஸ்டிக் உபயோகத்தின்  பயங்கரம் பற்றி ஏற்கனவே நீங்கள் நிறைய அறிந்திருப்பீர்கள்.

பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்குவது, பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான உணவுப் பொருட்களை அடைத்து  எடுத்து வருவது, பிளாஸ்டிக் கவர்களில் காய்கறி மற்றும் பொருட்களை அடைத்து ஃப்ரிட்ஜினுள் வைப்பது என  பிளாஸ்டிக்கின் உபயோகம் தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. அந்த பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருள்  உணவோடு கலந்து விஷமாக மாறி நம் ஆரோக்கியத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதைப் பற்றிப் பலரும்  யோசிப்பதில்லை. உணவுப் பொருட்களை கண்ணாடிப் பாத்திரங்களிலும் காய்கறி, பழங்களை ஈரத்துணிகளிலும் உணவுப்  பொருட்களை மஞ்சள் பைகளிலும் வாங்கிய காலங்களில் இத்தனை உடல்நலப் பிரச்னைகள் இருக்கவில்லை.  யோசியுங்கள்.

 உணவு...

நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதுதானா? இயற்கை வேளாண்மையை மறந்துவிட்டோம். காய்கறிகள், பழங்கள்தானியங்கள் என எல்லாம் செயற்கை உரங்கள் போட்டே வளர்க்கப்படுகின்றன. அறுவடைக்குப் பின் நம் கைகளுக்கு  வந்து சேரும் போது கெட்டுப் போகாமலிருக்க ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப்பட்டே வருகின்றன. இவை உள்  உறுப்புகளின் செயல்பாட்டையும் ஹார்மோன்களின் செயல்பாட்டையும் முற்றிலுமாக சிதைக்கக்கூடியவை.

தினமும் புரோட்டா கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகள் பல வீடுகளில் இருக்கிறார்கள். சாப்பிடக்கூடாது எனச்  சொன்னால், `ஊரே சாப்பிடுது... நான் சாப்பிட்டா என்ன?’ என்கிற எதிர்கேள்வி எழும். சாப்பிடாமலேயே இருப்பதற்கு  எதையாவது சாப்பிட்டால் தேவலை என்கிற எண்ணத்தில் மைதா உணவுகளான புரோட்டா, பப்ஸ், கேக் என கேடு  நிறைந்த உணவுகளை ஊட்டி வளர்க்கிறோம்.

இன்னொரு பக்கம் நம் பிள்ளைகளை Taller, Stronger, Sharper ஆக்குவதாக உத்தரவாதம் தருகிற  ஹெல்த் ட்ரிங்க்குகளை வாங்கிக் கொடுக்கிறோம். அது போன்ற பானங்களில் கலக்கப்படுகிற மால்ட்டும், தேவைக்கதிக  சர்க்கரையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அஸ்திவாரத்திலேயே ஆட்டம் காணச் செய்பவை.

என் பொண்ணு தினம் காலையில ஃப்ரெஷ் ஜூஸ்தான் குடிச்சிட்டுப் போவா’ எனப் பெருமையாகச் சொல்லிக்  கொள்வார்கள். அந்த ஃப்ரெஷ் பழங்களின் பின்னணியில் உள்ள விவசாய அரசியல் அவர்களுக்குத் தெரியாது. மாதுளம்  பழம் வாங்கும் போது வெள்ளையாக, சற்றே துவர்ப்புச் சுவையுடன் உள்ள நாட்டுப் பழத்தை வாங்க மாட்டோம்.

பார்க்கப் பளபளப்பாக, செக்கச் செவேலென கவர்ந்திழுக்கும் சிவப்பு நிற பழங்களையே வாங்குவோம். அதுதான்  கெடுதியானது. பெண் குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் என மேற்கத்திய உணவுகளைக் கொடுக்காமல், முளைகட்டிய  தானியங்களையும், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களையும் ெகாடுப்பதை அம்மாக்கள் பழக்க  வேண்டும். பிராய்லர் சிக்கன் கொடுப்பதை அறவே தவிர்ப்பது அவசியமானது.

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளையும், வெள்ளைச் சர்க்கரை, அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் தூள் உப்பு  போன்றவற்றையும் எண்ணெயில் வறுத்த பொருட்களையும் குறைத்துக் கொள்ளவும். ஊட்டச்சத்து பானங்களுக்கு  பதிலாக கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும். சீமைப்பால்தான் நமக்குப்  பெரும்பாலும் கிடைக்கிறது. அதிலுள்ள புரதம் நம் உடலுக்கு ஒவ்வாதது. நாட்டுப்பசு மாடுகள் குறைந்து வருகின்றன.

அவையும் செயற்கைக் கருவூட்டலின் மூலமே கருத்தரிக்கின்றன. பால் அதிகம் சுரக்க ஹார்மோன் ஊசிகள்  போடப்படுகின்றன. அவை நம் உடலில் கலந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும். மீறி கருத்தரித்தாலும் கருச்சிதைவு  ஏற்படும். எனவே, பால், காபி, டீயை முற்றிலும் தவிர்க்கவும். இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட உணவுப்  பொருட்களையே பயன்படுத்துங்கள். ஒருவேளை உணவு சமைக்காத உணவாக இருக்கட்டும். முளைகட்டிய பச்சைப்  பயறு, கேரட், வெள்ளரி, பழங்கள், உலர்ந்த பழங்கள் சிறந்தவை.

தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்குப் பதில் சிவப்பரிசி, மாப்பிள்ளை சம்பா, தினை, வரகு, சாமை போன்றவற்றைப்  பயன்படுத்துங்கள்.நம் உடல், உறுப்புகளின் கடிகாரம் படி இயங்குகிறது. உடலில் 12 முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை  ஒவ்வொன்றும் ஒரு நாளின் குறிப்பிட்ட 2 மணி நேரம் அரிய செயல்திறனோடு இருக்கும். அதை ஒட்டியே நமது உணவு  மற்றும் வாழ்வியல் இருக்க வேண்டும்.

 உதாரணத்துக்கு... அதிகாலை 3 முதல் 5 மணியை பிரம்ம முகூர்த்தம்  என்கிறோம். அது நுரையீரலுக்கான நேரம்.  
இந்நேரத்தில் எழுந்திருப்பது ஆரோக்கிய வாழ்க்கையின் அடிப்படைப் பழக்கமாக வேண்டும். ஓஸோன் கதிர்கள் இறங்கும்  இந்நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்தால் நுரையீரல் பிரச்னைகள் சரியாகும். உடல் பலப்படும். காலை 5 முதல் 7 மணி  வரை பெருங்குடலுக்கான நேரம். அந்த நேரத்தில்தான் காலைக்கடன் கழிக்கப்பட வேண்டும். 7 முதல் 9 மணி  வயிற்றுக்கானது என்பதால், காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 9 முதல் 11 மணி வரை மண்ணீரலுக்கானது.  அப்போது திட, திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

மதிய உணவு 1 முதல் 3 மணிக்குள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இது சிறுகுடலின் நேரம். இரவு உணவு 7 முதல்  8 மணிக்குள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இரவு 11 முதல் 3 மணி வரை பித்தப் பை மற்றும் கல்லீரலுக்கான  நேரம். அப்போது தூங்கி ஓய்வெடுப்பதன் மூலம் வளர்சிதை மாற்றம் நல்லபடியாக நடைபெறும். உடலுழைப்பே இல்லாத  நிலையில் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சியும் யோகாவும் செய்ய வேண்டியது அனைத்து வயதினருக்கும்  அவசியம்.

வாழ்க்கை முறை...

உள்ளங்கையில் உலகம் என்கிற மாயைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தலைமுறைக் குழந்தைகள். இயற்கை  காற்றை சுவாசிக்காமல் விடிய விடிய ஏசி போட்டுக் கொண்டு கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு பெட்டிக்குள் அடைத்து  வைத்த மாதிரி தூங்குகிறோம். எப்போதும் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைலுடன் உறவாடுகிறோம்.

படிப்பு, அதை விட்டால் செல்போன், கம்ப்யூட்டர் என Gadgets மயக்கத்தில் கட்டுண்டுக் கிடக்கிறோம். இவற்றில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சானது, ஆண் பிள்ளைகளின் மலட்டுத்தன்மைக்குப்  பெரியளவில் காரணமாகும். குழந்தைதானே என அலட்சியமாக விட்டீர்களானால், அவர்களுக்கு குழந்தைகளே இல்லாமல்  போகிற அபாயத்துக்கு நீங்களும் துணை போவதாகவே அர்த்தம்.

இதையெல்லாம் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் பெற்றோரின் கடமை. நம்மால் சரிசெய்து கொள்ளக்கூடிய சின்னச்  சின்ன விஷயங்களான இவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பின்னாளில் விதியை சபிப்பதில் அர்த்தமில்லைதானே?...’’

arulalans